27 April 2011

நட்பு

நண்பர்கள் பற்றி இஸ்லாம் கூறுவது என்ன?
முகஸ்துதிக்காக பழகினால் என்ன செய்யலாம்?
உண்மையான நட்பு எது?
அழகிய முறையில் நட்பு கொள்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நன்மையான காரியம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

மலர்ந்த முகத்துடன் உனது சகோதரனை நீ சந்திப்பது உட்பட எந்த நல்ல காரியத்தையும் அற்பமாக நினைத்து விடாதே என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி); நூல்: முஸ்லிம் (4760)
நல்ல நண்பனைத் தேர்வு செய்வதற்கு முன்னால்:
ஒரு நல்ல நண்பனை நாம் தேர்வு செய்வதற்கு முன்னால் நம்மை நாம் நல்லவனாக மாற்றிக் கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும். ஏனென்றால் நம்மிடத்தில் நல்ல பண்புகள் இருந்தால் தான் நல்லவர்கள் நம்மிடம் பழகுவார்கள். இனம் இனத்தைச் சாரும் என்ற அடிப்படையில் நல்லவர்கள் நல்லவர்களுடன் தான் நட்பு வைப்பார்கள். இதனால் தான் மோசமான குணம் உள்ளவர்களிடம் அது போன்ற குணம் உள்ளவர்கள் தான் அண்டுவார்களே தவிர நற்குணம் படைத்தவர்கள் அண்டுவதில்லை. இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வரும் ஹதீஸில் சுட்டிக் காட்டுகிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் உயிர்கள் பல்வேறு வகைப்பட்டவை ஆகும். அவற்றில் ஒன்றுக்கொன்று (குணத்தால்) ஒத்துப் போகின்றவை பரஸ்பரம் பழகுகின்றன. ஒன்றுக்கொன்று (குணத்தால்) வேறுபட்டிருப்பவை பரஸ்பரம் முரண்பட்டு (விலகி) நிற்கின்றன.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்: புகாரி (3336)

நல்லவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுதல்:
பூவோடு சேர்ந்தால் நாரும் மணக்கும் என்று கூறுவார்கள். நாம் பழகும் நண்பர்களைப் பொறுத்து நமது நிலை மாறுகிறது. எனவே நம்முடைய இரு உலக வாழ்க்கையும் சிறப்புடன் விளங்க நல்ல நண்பர்களைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழகான உதாரணத்தைக் கூறி விளக்கியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரும் கொல்லனின் உலையுமாகும். கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல போகாது. நீர் அதை விலைக்கு வாங்கலாம். அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக் கொள்ளலாம். கொல்லனின் உலை உமது வீட்டையோ அல்லது உனது ஆடையையோ எரித்துவிடும். அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக் கொள்வீர்.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி); நூல்: புகாரி (2101)

தீயவர்களுடைய நட்பு நம்முடைய மறுமை வாழ்வை எரித்து நாசப்படுத்திவிடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேலுள்ள ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள். வீணர்களுடைய சகவாசத்தால் மறு உலக வாழ்கையைத் தொலைத்தவர்களின் புலம்பல்களை இறைவன் பின்வரும் வசனத்தில் எடுத்துரைக்கிறான்.

குற்றவாளிகளிடம் "உங்களை நரகத்தில் சேர்த்தது எது?'' என்று விசாரிப்பார்கள். "நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை'' எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம். (74:45)

நல்ல நண்பன் நம்முடன் இருந்தால் தவறு செய்ய நாம் முற்பட்டாலும் நல்லதை நமக்கு விளக்கிச் சொல்லி அதில் விழவிடாமல் நம்பை பாதுகாத்து விடுவான். நபிமார்கள் நல்வழியை மக்களுக்குப் போதிப்பதற்காக வந்தார்கள். அவர்களை இப்பணியில் தூண்டிவிடுவதற்காக அல்லாஹ் அவர்களுக்கென்று ஒரு நண்பரை ஏற்படுத்தியுள்ளான். நபிமார்களுக்கே நல்ல நண்பர் தேவைப்படுகிறார் என்றால் நிச்சயமாக நாம் அனைவரும் நல்லவர்களை நண்பர்களாகப் பெற்றிருக்க வேண்டும்.

அல்லாஹ் எந்த ஒரு இறைத்தூதரை அனுப்பினாலும் இன்னும் எந்த ஒரு ஆட்சித் தலைவரை நியமித்தாலும் அவருக்கு நெருக்கமான இரு ஆலோசகர்கள் இருப்பார்கள். ஒரு ஆலோசகர் நன்மையை செய்யும் படி அவரை ஏவி தூண்டுவார். மற்றொருவர் தீமை செய்யும் படி அவரை ஏவி தூண்டுவார். அல்லாஹ் (குற்றங்களிலிருந்து) யாரைப் பாதுகாத்தானோ அவரே மாசற்றவராக இருப்பார்.
அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி); நூல்: புகாரி (7198)

அல்லாஹ்விற்காக நட்புவைத்தல்:
பெரும்பாலான நண்பர்கள் வீணாகப் பேசுவது, ஊர் சுற்றுவது, திரையரங்குகளுக்குச் செல்வது போன்ற தீய காரியங்களில் ஒன்றுபடுகிறார்கள். அனைவரும் அல்லாஹ்வுடைய மார்க்கம் மேலோங்குவதற்காக ஒன்று கூடுவது அரிதிலும் அரிதாகி விட்டது. இஸ்லாத்தைப் பரப்புவதற்காக அறிமுகமில்லாத பலரிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்தி நட்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இறைவனுக்காக நட்புவைத்தவர்களுக்கு ஏராளமான சிறப்புகள் இருப்பதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் அல்லாஹ்விற்காக நேசிக்கிறாரோ அல்லாஹ்விற்காக வெறுக்கிறாரோ அல்லாஹ்விற்காக கொடுக்கிறாரோ அல்லாஹ்விற்காக கொடுக்காமல் இருக்கிறாரோ அவர் ஈமானை பூரணப்படுத்திக் கொண்டார்.
அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி) அவர்கள்; நூல்: அபூதாவுத் (4061)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் வேறொரு ஊரில் இருக்கும் தன் சகோதரனைச் சந்திப்பதற்காக ஒருவர் சென்றார். அவர் செல்லும் வழியில் ஒரு வானவரை அல்லாஹ் அவரிடத்தில் அனுப்பினான். அந்த வானவர் அவரிடத்தில் வந்த போது நீங்கள் எங்கே செல்ல நினைக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அவர் இந்த ஊரில் உள்ள எனது சகோதரனை (சந்திக்க) நாடிச் செல்கிறேன் என்று கூறினார். உங்களுக்கு சொந்தமான எதையாவது அவர் உங்களுக்கு தர வேண்டியுள்ளதா என்று வானவர் கேட்டார். அதற்கு அவர் இல்லை. கண்ணியமானவனும் சங்கையானவனுமான அல்லாஹ்விற்காக அவரை நேசிக்கிறேன் என்று கூறினார். அந்த வானவர் நீங்கள் யாருக்காக அவரை நேசித்தீர்களோ அவன் உங்களை நேசிக்கிறான் என்பதை உங்களிடம் (கூற வந்த) அல்லாஹ்வின் தூதராவேன் நான் என்று கூறினார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: முஸ்லிம் (4656)

என் விஷயத்தில் ஒருவருக்கொருவர் நேசித்துக் கொள்பவர்களுக்கும் என் விஷயத்தில் அமர்பவர்களுக்கும் என் விஷயத்தில் போட்டி போட்டுக் கொண்டு செலவு செய்பவர்களுக்கும் எனது பிரியும் உறுதியாகி விட்டது என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆத் (ரலி); நூல்: அஹ்மத் (21114)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மறுமை நாளில் எனக்காக நேசம் வைத்துக் கொண்டவர்கள் எங்கே? என்னுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத இந்நாளில் நான் அவர்களுக்கு எனது நிழலைத் தருகிறேன் என்று கூறுவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: முஸ்லிம் (4655)

உதவும் நண்பனே உண்மையான நண்பன்:

நாம் வசதி வாய்ப்புகளுடன் வாழும் போது நமக்கு ஏராளமான நண்பர்கள் கிடைப்பார்கள். ஆனால் கஷ்டங்கள் வரும் போது அனைவரும் ஓடி விடுவார்கள். இவர்கள் உண்மையான நண்பர்கள் அல்ல. நாம் சிரமப்படும் போதும் நமக்கு உதவி செய்பவர்களே உண்மையான நண்பர்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தனக்கு விரும்புவதை தன்னுடைய சகோதரனுக்கு விரும்பாதவரை உங்களில் எவரும் ஈமான் கொண்டவராக ஆகமுடியாது.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி); நூல்: புகாரி (13)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான். அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகுமாறு) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான். எவர் ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகின்றான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி); நூல்: புகாரி (2442)

நன்மையை ஏவி தீமையைத் தடுக்க வேண்டும்:
தீமையான காரியங்களில் நன்பனுக்க ஒத்துப் போவது கூடாது. நன்பன் நன்மையான காரியங்களைச் செய்ய மறந்து விட்டால் உண்மை நன்பன் அவனுக்கு ஞாபகமூட்ட வேண்டும். நண்பன் தொழ மறந்து விட்டால் இதை அவனிடத்தில் தெரியப்படுத்தி அவனை தொழ வைக்க வேண்டும். நண்பன் நல்ல காரியங்களைச் செய்தால் அவனுடன் சேர்ந்து நாமும் செயல்பட வேண்டும். பின்வரும் நபிமொழிகள் நண்பர்கள் ஒருவரையொருவர் சீர்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உணர்த்துகிறது.

03 April 2011

கண்டெடுக்கப்பட்ட பொருளை என்ன செய்யலாம்?

பிறர் தவற விட்ட பொருளை ஒருவர் கண்டெடுத்தால் அவர் ஒரு வருட காலம் மக்களிடம் விளம்பரம் செய்ய வேண்டும். விளம்பரம் செய்யாமல் அதை வைத்துக் கொள்ளக் கூடாது. ஒரு வருட காலம் அறிவிப்புச் செய்தும் யாரும் வராவிட்டால் எடுத்தவரே அப்பொருளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றி அறிவிப்புச் செய்யாமல் அதைத் தம்மிடம் வைத்துக் கொண்டிருப்பவர் வழிகேட்டிலேயே உள்ளார்.
அறிவிப்பவர் : ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி)
நூல்: முஸ்லிம் (3556)


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் (வந்து), பாதையில் கண்டெடுக்கப்பட்ட (பிறர் தவறவிட்ட) பொரு(ளின் சட்டங்க)ளைப் பற்றிக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அதன் முடிச்சை' அல்லது "அதன் பையையும் அதன் உறையையும்' (அதாவது அதன் முழு விவரங்களை) நீ அறிந்து வைத்துக் கொள்! பிறகு ஓராண்டுக் காலம் அதனைப் பற்றி விளம்பரப்படுத்து! அதற்குப் பிறகு அதனை நீ பயன்படுத்திக் கொள்! அதன் உரிமையாளர் (முறைப்படி அதைக் கேட்டு) வந்து விட்டால் அதை அவரிடம் கொடுத்துவிடு!'' என்றார்கள்.
அறிவிப்பவர் : ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி)
நூல்: புகாரி (91)


பாதையில் கண்டெடுக்கப்பட்ட பொருள் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. மக்கள் நடமாட்டமுள்ள பாதையிலோ அல்லது மக்கள் புழக்கமுள்ள ஊரிலோ கண்டெடுக்கப்பட்டிருந்தால் ஒரு வருட காலம் அதைப் பற்றி நீர் அறிவிப்புச் செய்ய வேண்டும். அதைத் தேடி எவரேனும் வந்தால் அவரிடம் அதை நீர் ஒப்படைக்க வேண்டும். வரா விட்டால் அது உனக்குரியதாகும்.
 

(எவருக்கும் சொந்தமில்லாத புறம்போக்கான) தரிசு நிலத்தில் கண்டெடுக்கப்பட்டவற்றிலும் புதையலிலும் ஐந்தில் ஒரு பங்கு (வரி) உண்டு. அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி)
நூல்: நஸாயீ (2448)


பொருளைத் தவற விட்டவர் அதைத் தேடி வராத வகையில் கண்டெடுக்கப்பட்ட பொருள் அற்பமானதாக இருந்தால் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு வருட காலம் அறிவிப்புச் செய்து காத்திருக்க வேண்டியதில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாதையில் கிடந்த ஒரு பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்றார்கள். "இது சதகா(தர்ம)ப் பொருளாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் இதை நான் சாப்பிட்டிருப்பேன்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி (2431)


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எடுத்த பேரீச்சம் பழம் தர்மப் பொருளாக இருக்க வாய்ப்புள்ளது என்பதால் அதை உண்ணாமல் விட்டு விட்டார்கள். இல்லையென்றால் அதை உண்டிருப்பார்கள்.

எனவே இது போன்ற அற்பப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டால் அவற்றை பயன்படுத்திக் கொள்வது தவறல்ல.



Source: www.onlinepj.com

செல்போனில் குர்ஆன் வசனங்களை ரிங் டோனாக வைத்துக் கொள்ளலாமா?

சவூதி உலமாக்கள் சிலர் இது கூடாது என்று ஃபத்வா கொடுத்துள்ளனர். ஆனால் கூடாது என்பதற்கு இவர்கள் கூறும் காரணம் ஏற்கத் தக்கதல்ல.

ரிங் டோனாக குர்ஆன் வசனம் இருந்தால் போன் அழைப்பை ஏற்கும் போது குர்ஆனை இடையில் நிறுத்தும் நிலை ஏற்படும் என்பதைத் தான் இதற்குக் காரணமாகக் கூறுகின்றனர் இது குர்ஆனை அவமதிப்பதாகும் என்று கூறுகின்றனர்.

குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பவர் தேவை ஏற்படும் போது இடையில் நிறுத்தக் கூடாது என்று ஏதாவது ஆதாரம் இருந்தால் இவர்களின் வாதத்தை ஏற்கலாம். தொழுகையை இடையில் நிறுத்தக் கூடாது என்று தடை உள்ளது போல் குர்ஆன் ஓதுவதை தேவைப்படும் போது இடையில் நிறுத்தக் கூடாது என்று தடையேதும் இல்லாத போது இவர்கள் கூறும் காரணம் ஏற்கத் தக்கதல்ல.

நாம் குர்ஆனை ஓதிக் கொண்டிருக்கும் போது ஒருவர் கதவைத் தட்டுகிறார் என்றால் குர்ஆன் ஓதுவதை நிறுத்தி விட்டு கதவைத் திறக்கலாமா என்றால் திறக்கலாம் என்று தான் இவர்களே கூறுவார்கள். இதனால் குர்ஆனை அவமதித்து விட்டார் என்று ஆகாது. ஒருவர் ஒரு தேவைக்காக நம்மைத் தொடர்பு கொள்ளும் போது அதற்குப் பதிலளிப்பது என்பது குர்ஆன் கற்றுத் தரும் பண்பாட்டுக்கு ஏற்றது தான்.

நாம் குர்ஆன் ஓதும் போது ஒருவர் நமக்கு ஸலாம் கூறினால் ஓதுவதை நிறுத்தி விட்டு பதில் சொல்ல வேண்டும். இது குர்ஆனை அவமதித்ததாக ஆகாது.

ஒரு முஸ்லிமிடம் இருக்க வேண்டிய நற்பண்புகளைக் கடைப்பிடிப்பதற்காக குர்ஆனை இடையில் நிறுத்துவது எந்த வகையிலும் குர்ஆனை அவமதித்ததாக ஆகாது. குர் ஆன் வழிகாட்டுதலை மதித்தததாகத் தான் ஆகும். இடையில் நிறுத்தக் கூடாது என்று கட்டளை இருந்தால் மட்டுமே அது குர்ஆனை அவமதித்ததாக ஆகும்.

தொலை பேசியில் வரும் ரிங் டோனும் ஒரு அழைப்பு தான். அந்த அழைப்புக்குப் பதில் சொல்வதற்காக நாம் ரிங் டோனை நிறுத்துகிறோமே தவிர குர்ஆனை அவமதிப்பதற்காக அல்ல.
பாடல்களும் இசையும் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டிருக்கும் போது அதைத் தவிர்க்க வேண்டுமே என்ற இறையச்சத்தின் காரணமாகவே அதிகமானோர் குர்ஆனை ரிங் டோனாக வைத்துக் கொள்கின்றர். இந்த ஃப்தவாவினால் மீண்டும் பாடல்களை ரிங் டோனாக மாற்றும் நிலைக்குத் தள்ளுகின்றனர்.

கழிவறைக்கு செல் போனை எடுத்துச் செல்லலாமா?

குரான் வசனம் சுமந்து கொண்டு அவர்கள் கழிவறை செல்வதும் உண்டு. எனவே குரான் வசனம் அப்போதும் ரிங் டோன் போன்றே இசைக்கும். குரான் வசனங்கள் கழிவறையில் பயன்படுத்தலாமா?.

இப்போது அதிகமான மக்கள் பயன்படுத்தக் கூடிய செல் போன்களில் குர்ஆன் டெக்ஸ்ட் குர் ஆன் அரபி மூலம் மார்க்க நூல்கள், பயான்கள் ஆகியவை பதிவு செய்யக்கூடிய வகையில் தான் உள்ளன. மார்க்க ஆர்வமுள்ளவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இவர்கள் கழிவறை சென்றால் என்ன செய்ய வேண்டும்? இவர்களின் செல்போனுக்குள் குர்ஆன் உள்ளதால் அதைக் கழிவறைக்குள் கொண்டு செல்லாமல் இருக்க வேண்டும் என்று ஒருவர் முடிவு செய்தால் அது போல் குர்ஆன் ரிங்டோனாக வைத்திருப்பவரும் செல் போனை கழிவறைக்குள் கொண்டு செல்லாமல் தவிர்க்கலாம்.

அல்லது வெளியே வைக்க முடியாத நிலை இருந்தால் கழிவறை செல்லும் போது போனை ஆப் செய்து விடலாம்.

கழிவறை செல்லும் போது குர்ஆன் ஒலிக்கும் என்பதால் குர்ஆனை ரிங் டோனாக வைக்கக் கூடாது என்றால் குர்ஆன் சாப்ட்வேர் பதிவிறக்கம் செய்யப்பட்ட செல் போனையும் பயன்படுத்தக் கூடாது என்று கூற வேண்டும். ஆனால் குர்ஆனை ரிங் டோனாக வைக்கக் கூடாது எனக் கூறுவோர் குர் ஆன் சாப்ட்வேர் விஷயத்தில் இப்படி கூறுவதில்லை. கழிவறை செல்லும் அவசியம் உள்ளதால் குர்ஆன் சாப்ட்வேர் உள்ள போனை பயன்படுத்தக் கூடாது என்று இவர்கள் கூறுவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


Source: www.onlinepj.com